

கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் பாலசுப்பிரமணியம் (வயது 51). இவர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்தது. இருப்பினும் கலெக்டருக்கு தொடர்ந்து காய்ச்சல், உடல் வலி இருந்ததால் நேற்று காலை மீண்டும் கலெக்டர் பாலசுப்பிரமணியம், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் பரிசோதனை முடிவு மாலையில் வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம், கலெக்டர் அலுவலக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.