

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 2.42 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடவில்லை என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15 லட்சத்து 15 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 72 ஆயிரத்து 938 நபர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இது 84.02 சதவீதம் ஆகும். எனவே முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 062 ஆவார்கள்.
2-ம் தவணை தடுப்பூசி 9 லட்சத்து 54 ஆயிரத்து 375 நபர்களுக்கு போடப்பட்டு உள்ளது. இது 63 சதவீதம் ஆகும். 2-ம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 3 லட்சத்து 18 ஆயிரத்து 563 பேர் ஆவார்கள்.
முற்றிலும் ஒழியவில்லை
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 27 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 912 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்று உள்ளனர். கொரோனா நோய் தொற்றானது முற்றிலும் ஒழியவில்லை.
எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.