

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தூர்வாராத சாக்கடை கால்வாய்
போடி 13-வது வார்டு முனிசிபல்காலனியில் சாக்கடை கால்வாயில் மண், குப்பை விழுந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி சரிசெய்ய வேண்டும். -முத்துகுமார், போடி.
வேகத்தடை அவசியம்
திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலை, ஏ.எம்.சி. சாலை சந்திக்கும் இடத்தில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் நடக்கின்றன. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். -கணேசன், திண்டுக்கல்.
நடுதெருவில் மின்கம்பங்கள்
திண்டுக்கல் நாகல்நகர் மென்டோன்சா காலனியில் நடுத்தெருவில் மின்கம்பங்கள் உள்ளன. அந்த வழியாக ரெயில்நிலையத்துக்கு ஆட்களை ஏற்றி கொண்டு ஆட்டோக்கள் அதிக அளவில் செல்கின்றன. நடுத்தெருவில் மின்கம்பங்கள் நிற்பதால் எதிரே வரும் வாகனங்கள் விலகி செல்ல முடியவில்லை. சிலநேரம் மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி விபத்தை சந்திக்கின்றன. எனவே மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். -லதா, திண்டுக்கல்.
சுகாதாரக்கேடு அபாயம்
திண்டுக்கல் காந்திமார்க்கெட் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு உருவாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -மாரி, திண்டுக்கல்.