

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பன்றிகள் தொல்லை
வேடசந்தூர் 9-வது வார்டு கொங்குநகரில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாக்கடை கால்வாய், குப்பைகளில் புரண்டு விட்டு அப்படியே குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. அந்த பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. எனவே பன்றிகள் தொல்லையை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாச்சிமுத்து, வேடசந்தூர்.
தெருவில் தேங்கிய மழைநீர்
உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் காலனிதெருவில் மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லாததால், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் தொல்லை அதிகரித்து விட்டதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி மழைநீர் வடிகால் வசதி செய்து தரவேண்டும்.
-சுபாஷ், அம்மாபட்டி.
எரியாத தெருவிளக்குகள்
பழனியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரி எதிரே உள்ள சாலையில் சில தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், பாதசாரிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதை தடுப்பதற்கு தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
-ரவிச்சந்திரன், சிவகிரிபட்டி.
சேதம் அடைந்த மின்கம்பம்
திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள கருணாநிதிநகரில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்புக்கூடு போன்று மின்கம்பம் காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து விழும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நட வேண்டும்.
-ஆனந்தன், திண்டுக்கல்.