சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரி தஞ்சையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பூக்காரத்தெரு 20 கண் பாலம் அருகே சிந்துநகர், அன்புநகர், பூக்கார 2-ம் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழி தோண்டப்பட்டு, குழாய் பதிக்கப்பட்டு மண்ணால் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. தஞ்சையில் பரவலாக மழை பெய்து வருவதால் மண்சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.சில இடங்களில் மண் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தார் சாலை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிந்துநகரில் ஒன்று கூடி சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் வந்தால் தான் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com