மறுமணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!


மறுமணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
x
தினத்தந்தி 30 July 2023 1:30 AM GMT (Updated: 30 July 2023 1:30 AM GMT)

முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு கணவன்-மனைவி இருவரின் பக்கமும் சில காரணங்கள் இருக்கும். மறுமணம் செய்வதற்கு முன்பு, முதல் திருமணம் எதனால் தோல்வி அடைந்தது எனும் காரணத்தை நேர்மையாக அலசி ஆராய வேண்டும்.

திருமணம் என்பது வாழ்க்கை எனும் புத்தகத்தின் முக்கியமான அத்தியாயமாகும். பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக சிலருக்கு திருமண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. தன்னுடைய இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்வதற்காகவும், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும் பலர் மறுமணம் செய்து கொள்கிறார்கள். மறுமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்கள் அதிக சிக்கல்களை சந்திப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. இவற்றை தவிர்ப்பதற்கு, மறுமணம் செய்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.

இரண்டாவது துணையின் குழந்தைகள்:

மறுமணம் என்பது இருவரை மட்டும் சார்ந்தது அல்ல. முதல் திருமணத்தின் மூலம் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ குழந்தைகள் இருந்தால், அவர்களையும் இரண்டாவது பந்தத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். புதிதாக வரும் துணைக்கு, அந்தக் குழந்தையை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கலாம். அதேபோல், குழந்தை தன்னுடைய பழைய பெற்றோரை மீண்டும் சந்திக்கும் போது சில பிரச்சினைகள் ஏற்படலாம்.

பல குடும்பங்களில் விவாகரத்து முடிந்து இருவரும் பிரிந்த பிறகு, முன்னாள் கணவர் தங்கள் குழந்தை களை பார்க்க மனைவி அனுமதிப்பது இல்லை. இதனால், குழந்தையின் மனநிலையும் பாதிக்கப்படும். இதற்கு ஆரம்பத்திலேயே தீர்வு காணாவிட்டால், இரண்டாம் திருமணத்தில் சிக்கல்கள் எழக்கூடும்.

தவறுகளை திருத்திக்கொள்ளுதல்:

முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு கணவன்-மனைவி இருவரின் பக்கமும் சில காரணங்கள் இருக்கும். மறுமணம் செய்வதற்கு முன்பு, முதல் திருமணம் எதனால் தோல்வி அடைந்தது எனும் காரணத்தை நேர்மையாக அலசி ஆராய வேண்டும். அந்த திருமண வாழ்க்கையில் தாங்கள் செய்த தவறுகள், மறுமண வாழ்க்கையில் மீண்டும் நடக்காதவாறு கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உளவியல் சார்ந்த பிரச்சினைகள்:

மறுமண வாழ்க்கையில் சந்தேக மனப் பான்மை, சுயநலம், சுதந்திரமில்லாத உணர்வு, தேவையற்ற பயம் என பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மறுமண வாழ்க்கையில், தனது வாழ்க்கைத்துணைக்கு, அவருடைய முன்னாள் துணையுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேக உணர்வு, இருவரின் வாழ்க்கையையும் மன ரீதியாக பாதிக்கும். எனவே, முதலில் வெளிப்படையாக இதைப்பற்றி கேட்டு தெளிவடைந்த பின்பு, மறுமண பந்தத்தில் இணைவது நல்லது.


Next Story