கடந்த கால கசப்பான நினைவுகளை மறக்கும் வழிகள்


கடந்த கால கசப்பான நினைவுகளை மறக்கும் வழிகள்
x
தினத்தந்தி 16 April 2023 1:30 AM GMT (Updated: 16 April 2023 1:31 AM GMT)

வாழ்க்கையில் அனைவரும் தவறு செய்வது இயல்புதான். அந்த தவறு கற்றுக் கொடுத்த பாடத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.

வாழ்க்கையில் அனைவருக்கும் கசப்பான சில நினைவுகள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை மறக்காமல் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருந்தால், தினசரி வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. மனஅமைதியும், தன்னம்பிக்கையும் குறையும். கடந்த காலங்களில் செய்த தவறுகள், மனஅமைதியை பாதிக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதால் மனச்சோர்வு, பதற்றம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

வாழ்க்கையில் அனைவரும் தவறு செய்வது இயல்புதான். அந்த தவறு கற்றுக் கொடுத்த பாடத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும் என்பதை புரிந்துகொள்வது அவசியம். ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட விடாமல், மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் கசப்பான நினைவுகளை மறக்க சில விஷயங்களைப் பின்பற்றலாம். அதற்கான ஆலோசனைகள் சிலவற்றை பார்ப்போம்.

சில படங்கள், பொருட்கள், வாசனைகள் அல்லது இடங்கள் நமக்கு மோசமான நினைவுகளைத் தூண்டலாம். அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு செல்வதையோ அல்லது அந்த நினைவுடன் சம்பந்தப்பட்ட நபரையோ, பொருட்களையோ தவிர்த்தால் நாளடைவில் அந்த நினைவை மறக்க முடியும்.

கசப்பான நினைவுகள் மனதில் கிளர்ந்தெழும்போது, ஒரு நிமிடம் நிதானமாக செயல்பட்டு மகிழ்ச்சிக்குரிய நினைவுகளை மனதிற்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் தினந்தோறும் அந்தந்த நொடியில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். கடந்த காலம் அல்லது வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் நிகழ் காலத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

தினமும் உங்களை நீங்களே ஏதோ ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போது கசப்பான நினைவுகளை நினைக்க நேரம் இருக்காது. கசப்பான நினைவுகளைப் பற்றி சிந்திப்பதால் நம் உடலை கவனித்துக்கொள்ள தவறுகிறோம். எனவே உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

தினமும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். நம்பகத்தன்மை வாய்ந்த நபருடன் உங்களின் கசப்பான எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உளவியல் ஆலோசனைகளைப் பெற தயக்கம் காட்டாதீர்கள். மனதை அமைதியான நிலையில் செலுத்துவதற்கு உளவியல் ஆலோசகரை அணுகுவது சிறந்த வழியாகும். எப்போதும் ஒரே மாதிரி நகரும் வாழ்க்கை முறையில் சில சுவாரசியமான மாற்றங்களை ஏற்படுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துங்கள்.


Next Story