குழந்தைக்கு டயப்பர் காயங்கள் வராமல் தடுக்கும் வழிகள்


குழந்தைக்கு டயப்பர் காயங்கள் வராமல் தடுக்கும் வழிகள்
x
தினத்தந்தி 7 Aug 2022 1:30 AM GMT (Updated: 7 Aug 2022 1:30 AM GMT)

பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

யன்படுத்துவதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். டயப்பர் உபயோகிப்பதற்கு முன்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டால் இந்த பாதிப்புகளை எளிதாகத் தடுக்கலாம்.

டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் மென்மையான சருமத்தில் எரிச்சலுடன் கூடிய காயங்களை ஏற்படுத்தும். இது 'டெர்மடிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும். தொடைப்பகுதி சிவந்து காணப்படும். அரிப்பு உணர்வு தீவிரமாகும்போது அந்த இடத்தில் சிறு சிறு கொப்புளங்களும் உண்டாகலாம். இவை வந்த பிறகு தடுப்பதை விட, வரும் முன்பு காப்பது நல்லது. இதற்கான தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

டயப்பரை மாற்றுங்கள்

பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

துணிகளையோ, டயப்பரையோ துவைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் வெந்நீரில் நன்றாக அலசி, வெயிலில் உலர வைத்து பயன்படுத்துங்கள்.

உலர்வாக இருக்கட்டும்:

டயப்பரைக் கழற்றிய உடன் குழந்தையின் பிறப்புறுப்புகள், பிட்டப்பகுதி, தொடைப்பகுதியில் மிதமான வெந்நீர் கொண்டு துடைத்து விடுங்கள். பிறகு மென்மையான பருத்தித் துணி கொண்டு ஒற்றி எடுத்து, உலர விடுங்கள். இதனால் சருமத்துக்கு தேவையான காற்றோட்டம் உள்ளே செல்லும். சருமம் சுவாசிக்க இயலும்.

சுத்தம் செய்யுங்கள்:

காலை, மாலை இரு வேளைகளிலும் குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கும் இடங்களில் மிதமான சூடுள்ள நீரில் சுத்தம் செய்யுங்கள். டயப்பர் அணிந்த பகுதியில், சதை மடிப்புகள் உட்பட எல்லா இடங்களிலும் மென்மையாக சுத்தம் செய்யுங்கள். பருத்தித் துணி அணிவித்தாலும் இத்தகைய பராமரிப்புகள் அவசியம் செய்ய வேண்டும்.

இரவில் டயப்பர் அணிவித்தல்:

குழந்தைக்கு இரவு நேரத்தில் டயப்பர் அணிவிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம் அல்லது ஒரு டயப்பர் மட்டும் பயன்படுத்தலாம். குழந்தை தூங்கும்போது அணிவிக்கலாம். மறுநாள் காலை எழுந்தவுடன்

முதலில் அதை மாற்றிவிடலாம். இதனால் டயப்பர் உபயோகிப்பதால் வரும் சரும பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

பரிசோதியுங்கள்:

குழந்தைகளின் தொடைப்பகுதியை அவ்வப்போது பரிசோதியுங்கள். தோல் சிவத்தல், தடிப்புகள் இருக்கும்போது டயப்பர் பயன்படுத்த வேண்டாம். குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் உடனே சுத்தம் செய்யுங்கள்.

டயப்பரை வெளியில் செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது பருத்தித் துணிகள் அணிவிப்பது பாதுகாப்பானது.


Next Story