விடிய, விடிய வீதியுலா... சீர்காழி அருகே 11 பெருமாள்கள் தங்க கருட சேவை உற்சவம்


விடிய, விடிய வீதியுலா...  சீர்காழி அருகே 11 பெருமாள்கள் தங்க கருட சேவை உற்சவம்
x

தங்க கருட சேவை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 108 வைணவ திவ்யதேசங்களில் நாங்கூர் ஸ்ரீ நாராயண பெருமாள், அரி மேய வின்னகரம் ஸ்ரீ குடமாடுகூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்டபெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், காவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்ய தேச கோவில்கள் அமைந்துள்ளன.

நாங்கூரில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு கருட சேவை உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

கருட சேவையை முன்னிட்டு திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று 11 கோவில்களில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு மாலையில் நாங்கூர் மணிமாடக்கோவிலில் எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோவில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இரவு 12:00 மணிக்கு மேல் மணிமாடக்கோயில் ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுனிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுத வள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருள, அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று தங்க கருட சேவை உற்சவ வீதியுலா நடைபெற்றது.

11 பெருமாள்கள் தங்க கருட வாகனத்தில் வெண்பட்டு குடையுடன் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு 11 பெருமாள்களை தரிசித்து வழிபட்டனர்.

1 More update

Next Story