சிவபெருமானுக்கு சிகரெட் படையல்... லுத்ரு மகாதேவர் கோவிலின் தனிச்சிறப்பு

சிவபெருமானுக்கு சிகரெட் படைப்பது லுத்ரு மகாதேவர் கோவிலில் நடைபெறும் தனித்துவமான சடங்குகளில் ஒன்றாகும்.
இமாச்சலப் பிரதேசம், லுத்ரு மகாதேவர் கோவில்
லுத்ரு மகாதேவர் கோவில்
Published on

இந்துக்கள் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மண் சார்ந்த பழக்கவழக்கம் மற்றும் பாரம்பரிய வழக்கப்படி இறை வழிபாடு மற்றும் சடங்குகளை மேற்கொள்கிறார்கள். இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்யங்களும், பூஜைப் பொருட்களும் பாரம்பரிய வழக்கப்படியே இருக்கும். சில கோவில்களில் இந்த வழிபாடு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்களுக்கு, குறிப்பாக கருப்பசாமி, முஸ்வவரன், மதுரை வீரன் போன்ற உக்கிர தெய்வங்களின் வழிபாட்டில் மதுபானம் அல்லது சுருட்டு படையலாக வைப்பது தொன்மையான பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

லுத்ரு மகாதேவர் கோவில்

இதேபோன்று இமாச்சலப் பிரதேசத்தின் ரம்மியமான மலைப்பகுதியில், வேறு எங்கும் காண முடியாத ஒரு பாரம்பரிய சடங்கை பின்பற்றும் ஒரு கோவில் அமைந்துள்ளது. அது சோலன் மாவட்டத்தில் உள்ள லுத்ரு மகாதேவர் கோவில் ஆகும். இங்கு, பற்றவைத்த சிகரெட்டுகளையும் பீடிகளையும் நேரடியாக சிவபெருமானுக்குச் சமர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர்.

இயற்கையான குகைகளுக்குள் லுத்ரு மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. முன்னாள் பாகல் சமஸ்தானத்தின் மன்னரான பிரித்வி சிங் என்பவரால் கி.பி. 1621-ல் கட்டப்பட்ட இக்கோவில், வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோவிலின் சிறப்பம்சம், குழாய் போன்ற துளைகள் மற்றும் பள்ளங்களைக் கொண்ட சுயம்பு லிங்கம் ஆகும்.

இமாச்சல பிரதேசம் லுத்ரு மகாதேவ் கோவில்
லுத்ரு மகாதேவர் கோவில்

சிவபெருமானுக்கு சிகரெட் படைப்பது ஏன்?

சிவபெருமானுக்கு சிகரெட் படைக்கும் வழக்கம் ஒரு கலாச்சார நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, 'போலேநாத்' (Bholenath) என்று அழைக்கப்படும் சிவபெருமான், உண்மையான பக்தியுடன் படைக்கப்படும் எந்தவொரு காணிக்கையையும் ஏற்றுக்கொள்வார் என்பது அந்த நம்பிக்கை.

இந்து புராணங்களின்படி, சிவபெருமான் அகோரிகளின் கடவுளாகவும், கடினமான சூழலில் தியானம் செய்பவராகவும் கருதப்படுகிறார். மேலும், சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை உள்வாங்குவதற்காக கஞ்சா அல்லது விஷத்தை (நீலகண்டன்) உட்கொள்பவராகவும் போற்றப்படுகிறார்.

புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டை இறைவனுக்கு படைப்பது, ஒரு பக்தன் தனது உலகியல் ஆசைகள், தீய பழக்கவழக்கங்கள் மற்றும் தீய எண்ணங்களை இறைவனிடம் சமர்ப்பிப்பதைக் குறிக்கிறது. லிங்கத்தில் உள்ள இயற்கையான துளைகளின் வழியாக எரியும் சிகரெட் படைக்கப்படும்போது, ​​அதிலிருந்து புகை வெளியேறுவதைக் காண முடிகிறது.

சிகரெட் காணிக்கை- பலன்கள்

சிகரெட்டை பற்ற வைத்து லுத்ரு மகாதேவருக்கு படைத்து வழிபட்டால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும், நீண்டகால நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்றும் பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். இங்கு வரும் பக்தர்கள், உள்ளூர் கடைகளில் சிகரெட் அல்லது பீடி பாக்கெட்டை வாங்கி, அதில் ஒன்றை இறைவனின் சன்னதியில் பற்றவைத்து வைத்து ஆசி வேண்டி பிரார்த்திக்கின்றனர்.

இந்த கோவிலில் நடைபெறும் விசித்திரமான சிகரெட் படையல், பக்தர்களின் நம்பிக்கை, வழிபாடு தொடர்பான உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின் தனித்துவமான கலவையைக் காண, உலகெங்கிலும் இருந்து ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள், ஆன்மீகத் தேடலில் இருப்பவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com