நந்தி அபிஷேகம் செய்யும் சிவன் கோவில்

மேல்தளத்தில் உள்ள நந்தி விக்ரகத்தின் வாயில் இருந்து வெளியேறும் தீர்த்தம், சிவலிங்கத்தின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்
Published on

இந்தியாவில் வரலாற்று பெருமையும், கட்டிட கலை சிறப்பும் பெற்ற ஏராளமான கோவில்கள் உள்ளன. அந்த வகையில் அமையப்பெற்ற கோவில்தான், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோவில்.

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தின் சிறப்பே இங்குள்ள நந்தி பகவான்தான். பொதுவாக சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவான் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் சிவலிங்கத்துக்கு மேல் உள்ள தளத்தில் நந்தி பகவான் காணப்படுகிறார். அதோடு, அந்த நந்தி விக்ரகத்தின் வாயில் இருந்து எப்போதும் தீர்த்தம் வெளியேறிக்கொண்டே இருக்கிறது. நந்தியின் வாயில் இருந்து வெளியேறும் தீர்த்தமானது, சிவலிங்கத்தின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது நந்தி, சிவபெருமானை அபிஷேகம் செய்வது போன்று உள்ளது.

பின்னர், அந்த தீர்த்தம் கோவில் தெப்பக் குளத்தில் சென்று கலக்கிறது. நந்தியின் வாயில் இருந்து வெளியேறும் நீரானது எங்கிருந்து வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், அதை பருகினால் தீராத நோய்களும் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோவிலில் விநாயகருக்கும், நவக்கிரகங்களுக்கும் தனித் தனிச் சன்னிதிகள் உள்ளன. பெங்களூருவில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com