திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில்

திருச்சேறை சிவன் கோவிலில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்கேஸ்வரர் திகழ்கிறார்.
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில்
Published on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது. மகாபாரதத்தில் குந்தி தேவிக்கு உபதேசம் செய்தவரும், பாண்டவர்கள் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து வெளியேற யுக்திகளை கூறியவருமான தவுமிய மகரிஷி மோட்சம் பெற்ற தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது. இத்தல இறைவன் சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர் என்றும், இறைவி ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அர்த்தமண்டப நுழைவுவாசலில் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கிறார்கள். கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்க திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

வெளிப் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் இறைவி ஞானாம்பிகை தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். கருவறை தேவக்கோட்டத்திலும், பிரகாரத்திலும் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, மகாலட்சுமி, வாயு லிங்கம், சப்த கன்னிகள், சமயக்குரவர்கள், சண்டிகேஸ்வரர், சூரிய பகவான், நவக்கிரகங்கள் போன்றோர் அருள்பாலிக்கிறார்கள்.

ஆலயத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்கேஸ்வரர் திகழ்கிறார். இது மார்க்கண்டேய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் ஆகும். இந்த ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையாக வழிபட்டால் மனிதனுக்கு இருக்கும் பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன்களில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார். இவருக்கு தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, பின்பு 11-வது திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

இக்கோவிலில் சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று துர்க்கைகள் உள்ளனர். ஒரே கோவிலில் மூன்று துர்க்கை அம்மன் சன்னிதிகள் காணப்படுவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். ராகு காலத்தில் இந்த மூன்று துர்க்கைகளையும் வழிபடுவது விசேஷமானது.

இந்த ஆலயத்தில் பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. பிந்து சுதா தீர்த்தம் கோவிலின் உள்ளே அமைந்த கிணறு ஆகும். இது, அமுதத்தில் ஒரு துளி விழுந்து ஏற்பட்ட தீர்த்தமாக கருதப்படுகிறது. ஞான தீர்த்தம், கோவிலில் வெளியே அமைந்த திருக்குளம் ஆகும். மார்க்கண்டேய தீர்த்தம் என்பது ஆலய தெப்பக்குளம் ஆகும். கோவிலின் தல விருட்சமாக மாவிலங்கை மரம் உள்ளது. இது மகாலிங்க மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் நவராத்திரி, கந்த சஷ்டி, ஆடிப்பூரம், கார்த்திகை, பிரதோஷம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மீது விழுகிறது. பின்பு, சில மணி நேரங்களில் இறைவியின் திருப்பாதங்களில் சூரியக் கதிர்கள் படுவதை பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது.

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com