கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 இளநீர் அபிஷேகம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மாவட்டத்திலேயே மிக உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்கம் அமைந்து உள்ளது.
சுவாமிக்கு இளநீர் அபிஷேகம்
சுவாமிக்கு இளநீர் அபிஷேகம்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இங்கு குகன் என்ற முருககடவுள் ஈஸ்வரனை (சிவபெருமான்) வழிபட்டதால் இக்கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று.

இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்கம் அமைந்து உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் விசேஷ நாட்களில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பொதுநலன் கருதியும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அவ்வகையில், நாட்டில் கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி குகநாதீஸ்வரருக்கு இன்று 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது.

இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத் தொடர்ந்து அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.

பின்னர் குகநாதீஸ்வரருக்கு எண்ணெய், மஞ்சள் பொடி, களப பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி,நெய், தேன்,பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கருவறையில் அமைந்து உள்ள குகநாதீஸ்வரருக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com