

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும்பங்காற்றியவர் வல்லாள மகாராஜா. இவர் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்தபோது சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மீக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே போரில் உயிரிழந்த வல்லாள மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி மாசி மகம் நட்சத்திர தினமான நேற்று திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை சுமார் 9 மணியளவில் சந்திரசேகரர் திருவடிவில் அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் தீர்த்தவாரிக்கு சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கவுதம நதியை அடைந்ததும் நதிக்கரையில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமியின் சூல ரூபமான அஸ்திரதேவருக்கு கவுதம நதியில் தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கவுதம நதியில் நீராடினர். மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களும் கவுதம நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.