

சென்னையில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 7-ம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழா, வருகிற 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தின்போது தினமும் காலை 9.00 மணி மற்றும் இரவு 7.00 மணிக்கு பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை பத்மாவதி தாயார் பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவில் கஜ வாகனத்திலும், இன்று காலையில் சர்வபூபால வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வில் தேவஸ்தான உதவி நிர்வாக அதிகாரி தனஞ்சயா, கண்காணிப்பாளர் புஷ்பலதா, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.