நாகை சட்டநாத சுவாமி கோவில் தேரோட்டம்

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்
தேரோட்டம்
தேரோட்டம்
Published on

நாகப்பட்டினம்,

நாகையில் பிரசித்திப்பெற்ற அமிர்தவள்ளி அம்பாள் சமேத சட்டநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 20-ம் தேதி விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. 21-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. நேற்று இரவு வீதியுலா முடிந்த நிலையில், சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் சட்டநாத சுவாமி மேள தாளங்கள் முழங்க திருத்தேருக்கு எழுந்தருளினார். திருத்தேருக்கு எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமரேசன், துணை ஆணையர் ராணி, ஆய்வாளர் சிவானந்த பாகிரதி, நகர் மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். செயல் அலுவலர் தனலட்சுமி, கோவில் பணியாளர் குமார் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com