

தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும், நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று சுப முகூர்த்த தினம் என்பதால், கோவில் வளாகத்தில் காலை முதலே சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.