காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பக்தர்கள் தலை சம்பந்தமான நோய்கள் தீர வேண்டி மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், விஷ்ணு பகவான் ஆமை உருவில் வந்து சிவபெருமானை வணங்கிய திருத்தலமாகவும், தலை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் பரிகாரத் தலமாகவும் விளங்கி வருவது காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில்.
சிவபெருமானுக்கு உகந்த மாதமாகிய கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கடை ஞாயிறு சிறப்பு வழிபாடு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கார்த்திகை கடை ஞாயிறு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து கச்சபேஸ்வரரை வழிபட்டனர்.
ஏராளமான பக்தர்கள் காது, மூக்கு தொண்டை, கண் உள்ளிட்ட தலை சம்பந்தமான நோய்களை தீர்க்க வேண்டி மண்டை விளக்கு எடுத்து வழிபட்டனர். மண் சண்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் வைத்து கொண்டு கோவில் வளாகத்தை வலம் வந்து கச்சபேஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தனர்.






