புத்தாண்டையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்.!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் காணப்பட்டது.
புத்தாண்டையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்.!
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

புத்தாண்டை முன்னிட்டு, இன்றைய நாளை கடவுள் வழிபாட்டுடன் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையாரை தரிசிக்க சுமார் 6 மணி நேரம் ஆனதாக அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்றவண்ணம் உள்ளனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோலில்களில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் அஷ்டலிங்க கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் காஞ்சி சாலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com