சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா

விரதம் இருந்த 120 பெண்கள் உள்பட 730 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
சிவகிரி திரௌபதி அம்மன் கோவில், பூக்குழி திருவிழா, தீமிதி நிகழ்ச்சி
தீமித்த பக்தர்கள்
Published on

சிவகிரி,

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் வைகாசி மாத பூக்குழி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு காலை 4.30 மணி அளவில் சந்தனம், பன்னீர், பால், தயிர், குங்குமம், இளநீர் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

காலை 4.45 மணியளவில் கோவிலின் முன்பாக பூக்குழி இறங்கும் திடலில் வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.

தீமிதித்த பக்தர்கள்

மாலை 6 மணியளவில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ச்சுனர் ஆகிய உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்தனர். அதனைத் தொடர்ந்து 6.30 மணியளவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் கோவில் பூசாரி மாரிமுத்து பூக்குழி இறங்கினார். இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த 120 பெண்கள் உள்பட 730 பேர் வரிசையாக பூக்குழி இறங்கினர்.

இன்று (திங்கட்கிழமை) காப்பு கட்டிகள் சங்கத்தின் சார்பாக மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இரவு 11 மணி அளவில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தால ராவுத்தர் பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com