

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாத வெள்ளிக்கிழமை தெப்பத் தேரோட்ட திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டின் தெப்பத் தேரோட்ட திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி ஓடை தெரு ஆவுடை பொய்கை தெப்பக்குளம் எதிரே அமைந்துள்ள மண்டபத்தில் மாலையில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின்னர் இரவில் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி, 11 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.