

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிறு விடுமுறை நாளான இன்று கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையோரம் அமைந்த சிறந்த ஆன்மீக சுற்றுலா ஸ்தலமாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும், விளங்கி வருகிறது. இங்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
அவ்வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி ரூ100 கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் நின்று தரிசனம் செய்தனர். பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரம் ஆனது.
கோவில் நடை வழக்கம் போல் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. பக்தர்களின் வாகன மிகுதியால் நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.