

இந்தியாவின் பெருமைக்குரிய ஆன்மிக தலமாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 13-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு 'திருக்காமக் கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்' என்பதுதான் பெயராக இருந்தது. 1752-ம் ஆண்டிலிருந்துதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனது.
மீனாட்சி அம்மன் சிலை, சுத்த மரகத கல்லால் ஆனதாகும். இதனால் அன்னைக்கு 'மரகதவல்லி' என்ற பெயரும் உண்டு. சிவபெருமான் நடனமாடியதாக கூறப்படும் ஐம்பெரும் சபைகளில் மீனாட்சியம்மன் கோவிலும் ஒன்று. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலை தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு மட்டுமே வலது காலை தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
பொதுவாக அனைத்து சிவத்தலங்களிலும் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் (சிவன், உமை, முருகன்) இருப்பார். ஆனால் மதுரையில் மட்டும் இறைவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் பிரியாவிடை அம்மன் இருக்கிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்கும். இது, கருவறை உள்ளேயே நடத்தப்படுவதால் வெளியே தெரிவதில்லை. மதுரை பகுதியில் எப்படி வீடுகளில் பூப்புனித நீராட்டு விழா நடக்குமோ அப்படியே நடக்கும்.
மீனாட்சி அம்மனுக்குச் சூட்டப்படும் வைரக் கிரீடம் சுமார் 400 காரட் எடையுள்ளது. தங்கக் கவசம் சுமார் 6 கிலோ தங்கத்தால் ஆனது. முத்து விதானம், நீலமேகப் பதக்கம், தங்க அங்காடி, முத்து, நவரத்தினக் கிரீடங்கள், நற்பவளக் கொடி, விலை உயர்ந்த காசுமாலைகள் ஆகிய நகைகளும் உள்ளன. நளமகாராஜா, பாண்டிய, நாயக்க மன்னர்கள் மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து நகைகளும் மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொந்தமானவை.
1812-1828-ம் ஆண்டு வரை மதுரை கலெக்டராக இருந்தவர், ரவுஸ் பீட்டர். ஒரு முறை மீனாட்சி அம்மன் சிறுமி வடிவில் வந்து, இவரின் உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக அம்மனுக்கு தங்கத்தால் ஆன காலணிகளை பரிசாக அளித்தார். அதில் பீட்டர் என்ற தன் பெயரையும் பொறித்திருந்தார். இன்றும் சித்திரை உற்சவ நாளில் மீனாட்சி அம்மனின் பாதங்களில் இந்த காலணிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த பாதுகம் ‘பீட்டர் பாதுகம்' என்று அழைக்கப்படுகிறது.
தீபாவளி அன்று, காலையிலும், மாலையிலும் மீனாட்சி அம்மனுக்கு தங்கப் புடவையும், சொக்க நாதருக்கு வைர நெற்றி பட்டையும் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்கப் புடவை அணிவிக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கி.பி.1700-ம் ஆண்டு முதல் இன்று வரை தினமும் இரண்டு முறை 'நகரா முரசு' என்ற இசைக் கருவி ஒலிக்கிறது. கோவிலின் கிழக்குக் கோபுரம் எதிரில் உள்ள நகரா மண்டபத்தில் தினமும் காலை 4.30 மணி முதல் 5 மணிக்குள்ளும், மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள்ளும் இந்த நகரா முரசு ஒலிக்கும். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஏற்பாடு செய்த இந்த நகரா முரசு, கோவில் நடை திறக்கப்படுவதை அறிவிக்க ஒலிக்கப்படுகிறது.
அம்மன் சன்னிதி பிரகாரத்தில் சிதைந்த நிலையில் ஒரு சிவலிங்கம் உள்ளது. கி.பி. 1330-ம் ஆண்டு அன்னிய படையெடுப்பின்போது, இக்கோவிலில் தாக்குதல் நடக்கலாம் என்று எண்ணிய பக்தர்கள், இந்த லிங்கத்தை மண்ணால் மூடி வைத்தனர். அந்த தாக்குதலில் இருந்து தப்பிய லிங்கம் தான் இது.
உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் படி அளக்கும் ஈசனின் லீலையின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் விழா நடைபெறும். அன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இருவரும் சப்பரத்தில் மதுரை வெளி வீதிகளில் பவனி வருவர். சிவாச்சாரியார்கள் அரிசியை தூவிக்கொண்டு முன் செல்ல, அந்த சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து செல்கின்றனர்.
ஆனி பவுர்ணமி அன்று, மீனாட்சியம்மனுக்கு உச்சிக் கால பூஜையில் முக்கனி அபிஷேகம் செய்கின்றனர். கோவிலில் அம்மன், சுவாமிக்கென ஏராளமான நகைகள் இருந்தாலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு என பிரத்யேக ஆபரணங்கள் அணிவித்து வருவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. திருக்கல்யாணம் அன்று மட்டும் அம்மனுக்கு பிட்டத்தகடு அதாவது அம்மனின் பின் பகுதியில் பொருத்தப்படும் கவசங்கள் அணிவிக்கப்படுகின்றன.