ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயம்புத்தூர்,
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி 18 நாட்கள் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தை அமாவாசை நாளான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் சிம்ம வாகனம் பொறித்த மஞ்சள் நிற கொடி கட்டப்பட்டது. இதை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கொடிமரத்தை தோளில் சுமந்தவாறு கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மங்கள வாத்தியம், பேண்டு வாத்தியங்கள் முழங்க 10 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
அப்போது கருடங்கள் கொடிமரத்தை வட்டமிட்டன. இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் ‘‘மாசாணி தாயே, மாசாணி தாயே'' என்று பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். பின்னர் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி மரத்துக்கு பாலாபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன.
ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் வருகிற 31-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் மயான பூஜை நடைபெற இருக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம் நிகழ்வும், மாலை 6.30 மணியளவில் மகா பூஜையும் நடைபெறும். 2-ந்தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடைபெற இருக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படும். 3-ந்தேதி காலை 7.30 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள். 4-ந்தேதி காலை கொடி இறக்குதல் நிகழ்வுக்கு பிறகு மஞ்சள் நீராடலும், இரவில் மகா முனிக்க பூஜையும் நடைபெறும். 5-ந்தேதி காலை 11.30 மணியளவில் மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறும்.






