மதுரை சித்திரை திருவிழா.. ஆண்டாள் மாலையை ஏற்கும் அழகர்

அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்பட இருக்கிறது.
ஆன்மிக சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரை திருவிழா நாளை மறுநாள் தொடங்க உள்ளது. மே 6-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டம், 12-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் என தொடர் கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படும் ஆண்டாள் அணிந்த மலர் மாலையும், அலங்கார தங்கக்குதிரையும் இந்த விழாவில் முக்கிய இடம் பெறுகின்றன.
மே 12-ந்தேதி அதிகாலையில் அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக முந்தைய நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்பட இருக்கிறது. அந்த மாலையை ஏற்றுக்கொண்டுதான் அழகர் தங்கக்குதிரையில் அமர்ந்து வைகையில் இறங்க இருக்கிறார்.
இதேபோல திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கருடசேவையின்போது ஏழுமலையான் அணிந்து கொள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைக்கப்படுகிறது.
சித்திரை தேரோட்டத்துக்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கும் சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் மாலை அனுப்பி வைக்கப்படுகிறது.