

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சித்தி விநாயகர் சன்னதியில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பசு, யானை, குதிரைகளை கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு முன்புள்ள பூர்வாங்க பூஜைகள் இன்று காலை 7 மணிக்கு மேல் அம்மன் சன்னதி சித்தி விநாயகர் சன்னதி முன்பு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. பூஜையை மதுரநாயகம் என்ற அசோக் பட்டர் செய்தார். முதலில் பூஜைக்கான சிறப்பு பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தடடை அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் தலைமையில் அறங்காவலர்கள், இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்துக்கொண்டு ஆடி வீதியை வலம் வந்தனர்.
அதை தொடர்ந்து பிராமண அனுக்ஞை என்னும் உத்தரவு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரூ.20 நாணயங்களை கொண்டு தன பூஜையும், அஸ்வ(குதிரை) பூஜையும், 3 யானைகள் பங்கேற்ற கஜபூஜையும், கோ பூஜையும் நடந்தது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சித்தி விநாயகருக்கு வேத மந்திரங்கள் முழங்க மகாஅபிஷேகம் நடந்தது. பின்பு தேவதா அனுக்ஞை பெற்று (சுவாமியிடம் அனுமதி பெறுதல்) தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை (திங்கள்கிழமை) 2-ம் நாள் பூஜை நடக்கிறது. ஆடி வீதியில் கம்பத்தடி மண்டபத்தில் காலை 7 மணிக்கு பூஜை தொடங்குகிறது. காலையில் நவக்கிரக, திசா ஹோமமும், மாலையில் பிரவேச பலி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்தானீக பட்டர்கள் தலைமையில் கோவில் சிவாச்சாரியர்கள், ஒதுவார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்திற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தருமபுர ஆதீனம் மடத்தை சேர்ந்த மாயவரம், கும்பகோணத்தில் உள்ள கோவில்களில் இருந்து 2 யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தவிர கீரைத்துறையில் இருந்த 2 குதிரைகளும் பூஜைக்காக கொண்டு வரப்பட்டன. 11-ந் தேதி வரை பூர்வாங்க பூஜைகள் நடைபெறும்.