நாகை: ஆயக்காரன்புலம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் ஆயக்காரன்புலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா
Published on

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தியில் பழமை வாய்ந்த காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 9-ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதன்பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் இன்று காலையில் நிறைவு பெற்று மகா பூர்ணாஹுதி நடைப்பெற்று, சிறப்பு தீபாராதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது. மங்கல வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவிலின் மேல் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கோவிலில் உள்ளே உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com