

திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் உள்ள திருப்பனையூர் கிராமத்தில் பழமையான பெரிய நாயகி உடனுறை சுவாமி சௌந்தரேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளது. சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும், கரிகால சோழன் இளமை பருவத்தில் வளர்ந்து வழிபட்ட தலமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி கடந்த 3-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து யாக காலை பூஜைகள், மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
இன்று காலை கோ பூஜை, யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரங்களை அடைந்தனர். பின்னர் சௌந்தரேஸ்வரர் கோபுரம், ராஜகோபுரம், அம்பாள் கோபுரம் என பத்துக்கும் மேற்பட்ட விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
விழாவில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குரு மகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், கோவில் செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.