நாகர்கோவில்: தேய்பிறை அஷ்டமி - ஆயில்ய பூஜை சிறப்பு வழிபாடு

கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் காலபைரவர் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
நாகர்கோவில் அருகே உள்ள கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமி விழா மற்றும் ஆயில்ய பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணி முதல் 11 மணி வரை கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கால பைரவர் சந்நிதியில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காலபைரவர் சுவாமிக்கு மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பழம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் பதிவு தீபாராதனை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை தரிசித்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவாசக சபை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.






