நவராத்திரி கடைசி நாள்.. பரமத்தி வேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .
இந்த சிறப்பு வழிபாட்டில் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாளான நேற்று மாலை 6 மணி அளவில் அம்பு சேவையும், அதனைத் தொடர்ந்து அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதே போல் பேட்டை பகவதியம்மன் கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில், பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர் ஆகிய கோவில்களிலும் நவராத்திரி கடைசி நாள் விழா நடைபெற்றது.






