

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தேர்பவனி விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடந்தது. தொடர்ந்து நள்ளிரவில் புனித செபஸ்தியாரின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
இதில் உள்ளூர் மட்டுமின்றி சென்னை, கேரளா, மும்பை ஆகிய நகரங்களில் இருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
10-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி தென்மண்டலம் திருமண நீதிமன்ற நடுவர் சத்தியநேசன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மாலை ஆராதனையும், கொடியிறக்கமும் நடைபெற்றது. இன்று இரவு அசன விருந்துடன் விழா நிறைவடைகிறது.