

கன்னியாகுமரி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் மூன்றாம் நாள் முதல் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினசரி மாலையில் சந்தனகுடம் பவனி, காலை, மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் பத்தாம் நாளான நேற்று காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜையுடன் திருநடை அடைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து ஒடுக்கு பூஜைக்கு அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதார்த்தங்கள் பவனியாக எடுத்து வரப்பட்டன. 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் அம்மனுக்கு இந்த உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு ஒடுக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.