பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க குருவாயூர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அறிமுகம்

ஆன்லைன் முன்பதிவு வழியாக நாளொன்றுக்கு 2,400 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருச்சூர்,

குருவாயூர் கோவிலில் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு முறை நேற்று சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சோதனை முயற்சி

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இந்த கோவிலில் பக்தர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களுக்கு சிரமமில்லாத, சுமுகமான தரிசனத்தை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கம். கூட்ட நெரிசலை குறைக்கவும், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் குருவாயூர் தேவசம் வாரியம் இன்று சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சோதனை முயற்சியில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 300 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் ஆன்லைன் முன்பதிவு வழியாக நாளொன்றுக்கு 2,400 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

ஒதுக்கப்பட்ட நேரத்தில்...

இதுகுறித்து குருவாயூர் தேவசம் தலைவர் கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவிலில் சாமி கும்பிட நீண்ட வரிசைகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலால் பக்தர்கள் சந்திக்கும் சிரமங்களை இத்திட்டம் கணிசமாக குறைக்கும். சோதனை முயற்சி வெற்றி பெற்றால், அனைத்து நாட்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த தேவசம் வாரியம் திட்டமிட்டுள்ளது.

வர இருக்கும் ஓணம் பண்டிகை காலம் மற்றும் பிற முக்கிய யாத்திரை காலங்களில் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் தரிச னத்துக்கு முன்பதிவு செய்த பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கோவிலுக்கு வந் தால் போதுமானது. இதனால் இந்த செயல்முறை மிகவும் வசதியாகவும் சிரமமின்றியும் அமையும்.

பக்தர்கள் வரவேற்பு

குருவாயூர் தேவசம் வாரியம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் "இந்த மாதத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன. அடுத்த மாதத்துக்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. பக்தர்கள் குருவாயூர் தேவச இணையதளத்தில் (www.guruvayurdevaswom.in) தங்கள் தரிசன நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்" என தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில் ஆன்லைன் வரிசை முறையில் சாமி கும்பிட்ட பக்தர்கள் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்கில் நிற்காமல் தங்களால் சிரமமின்றி தரிசனம் செய்ய முடிவதாக இந்த திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com