பெரம்பலூர் துறைமங்கலம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா- பால்குட ஊர்வலம்

பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் புது நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருத்தேர் திருவிழா கடந்த 15-ந்தேதி முகூர்த்தக்கால் பூஜையுடன் தொடங்கியது. இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

பக்தர்கள் துறைமங்கலம் சிவசக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடத்தை சுமந்தபடி, உருமி மேளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் உற்சவ அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது. 26-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா, குடி விடுதலுடன் திருத்தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com