

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் பல்லவ உற்சவம் நேற்று தொடங்கியது. வருகிற 12-ந்தேதி வரை 7 நாட்கள் இந்த உற்சவம் நடைபெறுகிறது.
பல்லவ உற்சவத்தையொட்டி அனந்தசரஸ் திருக்குளம் அருகே உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாளை எழுந்தருளச் செய்து சிறப்பு திருமஞ்சனங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நாதஸ்வர இசை ஒலிக்க ஏழு நிற திரைகளை விலக்கி, பஞ்சாங்கம் வாசிக்க, கூடிநின்ற பக்தர்களுக்கு வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார்.
பின்னர் வரதராஜ பெருமாள் சன்னதி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெகு விமரிசையாக நடைபெற்ற பல்லவ உற்சவத்தின் முதல் நாளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.