மனித மனதை ஆட்டும் 'பாம்பாட்டி சித்தர்'!

பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகை மற்றும் சுயம்பு சிவலிங்கம் கோவை மருதமலை முருகர் கோவில் வளாகத்தில் பக்தர்களால் வழிபடப்படுகிறது.
மனித மனதை ஆட்டும் 'பாம்பாட்டி சித்தர்'!
Published on

"இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை

அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை

அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே!"

மனித உடலின் நிலையாமையை இதைவிட எளிய தமிழில் யாராலும் விளக்கிவிட முடியாது. உலகத்து பாம்புகளை ஆட்டியவர், பின்னாளில் மனித மனதுக்குள் இருக்கும் குண்டலினி எனும் பாம்பை ஆட்டி சித்தர்களின் வரிசையில் உயர்ந்தவர் தான் "பாம்பாட்டிச் சித்தர்".

கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் பாம்பாட்டி சித்தர். தொடக்கத்தில் காடுகளில் கொடிய பாம்புகளைப் பிடிப்பதும், அவற்றின் விஷத்தை எடுத்து விஷமுறிவு மருந்துகள் தயாரிப்பதும் இவருடைய தொழிலாக இருந்தது. கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் விஷமுறிவு ஆய்வுக்கூடம் அமைத்து மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார்.

சட்டைமுனி சித்தரின் சந்திப்பு

ஒருமுறை மருதமலையில் நவரத்தினப் பாம்பு (தலைப்பகுதியில் மாணிக்கம் கொண்ட பாம்பு) இருப்பதாகக் கேள்விப்பட்டு, அதைத் தேடி காட்டிற்குள் சென்றார். அங்கே திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பியபோது, பேரொளியுடன் சட்டைமுனி சித்தர் காட்சியளித்தார்.

"வெளியே திரியும் பாம்பைத் தேடாதே! உனக்குள்ளேயே உல்லாசத்தைத் தரும் 'குண்டலினி' என்ற பாம்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை விழித்தெழச் செய்" என்று உபதேசித்தார். அந்தப் பேரறிவை உணர்ந்த பாம்பாட்டியார், சட்டைமுனி சித்தரைத் தன் குருவாக ஏற்று தவம் செய்யத் தொடங்கினார்.

குண்டலினி யோகம்

தொடர் யோக சாதனையால் இவருக்குக் குண்டலினி யோகம் கைகூடியது. அஷ்டமாசித்திகள் உள்ளிட்ட பல்வேறு வித்தைகளை கற்றறிந்தார். இவர் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையிலும் வல்லவர் என்று வரலாறுகள் கூறுகின்றன.

ஆடுபாம்பே...

வாழ்வின் நிலையாமை, உலக மாயை, உடலின் தன்மை ஆகியவற்றை எளிய தமிழில் பாடினார். தன் பாடல்களின் இறுதியில் "ஆடுபாம்பே" என்று முடித்து, எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போல, மனித மனதுக்குள் இருக்கும் குண்டலினிக்கு உபதேசம் செய்தார். 'சித்தாரூடம்' என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.

ஜீவசமாதி

இவர் தவம் செய்த குகை மற்றும் சுயம்பு சிவலிங்கம் கோவை மருதமலை முருகர் கோவில் வளாகத்தில் இன்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறது. இவருடைய ஜீவசமாதி பீடங்கள் துவாரகை, மருதமலை, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் கூறப்பட்டாலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மேற்குக் கோபுர வாசல் அருகேயுள்ள புளியங்குடி சாலையில் அமைந்துள்ள ஜீவசமாதி பீடம் மிக முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று இவருக்குக் குருபூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com