

பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 97-ம் ஆண்டு பங்குனி மாத திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான நேற்று முன்தினம் இரவு வில்லிசை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
2-ம் நாளான நேற்று அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. காலையில் அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மனின் உடன்பிறந்த சகோதரரான மாயகண்ணன் வீட்டில் இருந்து அம்மனுக்கு பட்டு, வளையல் தாமரை மலர் உள்பட பூ வகைகள், மாலை பழ வகைகள், பலகாரங்கள் உள்ளிட்ட 201 சீர்வரிசைகள் எடுத்து வர, அம்மனுக்கு விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வர மேளதாளங்கள் முழங்க ஊரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்தனர். பின்னர் அம்மனுக்கு 600 கிலோ எடையில் பழங்களால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில் தர்மகர்த்தா சிவன்பாண்டியன் அம்மன் போல் வேடமணிந்து அம்மனை அலங்கரிப்பது போல் மலர்கள், மாலை, ரிபன், வளையல் அணிந்து, பவுடர் பூசி சிறப்பு காட்சி அளித்தார். பின்னர் பக்தர்களுக்கு மலர்கள் பிரசாதமாக வீசப்பட்டது. பக்தர்களுக்கு பழரசம், பானகம், மோர், வெள்ளரி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.