

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடந்து 6.30 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
இன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கிறது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்தும் வேல் குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.