

கும்பகோணம்,
கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என்று அழைக்கப்படும் ராமசாமி கோவில் உள்ளது. இது தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன், பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமந்த, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவின் 4-ம் நாளான கடந்த 22-ந்தேதி இரவு ஓலை சப்பரத்தில் தங்க கருடசேவையும், 7-ம் நாளான 25-ந்தேதி இரவு கோரதம் புறப்பாடும் நடந்தது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. இதனையொட்டி இன்று காலை சுமார் 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி விழா நடந்தது.