

திருப்பதி,
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி மூலவர்களான சீதா, ராமர், லட்சும ணரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி, அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணியளவில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருள செய்தனர்.
நரசிம்ம தீர்த்தத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை யாகசாலையில் அக்னி பிரதிஷ்டை மற்றும் சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் உள்ளிட்ட வைதீக சடங்குகள் நடத்தப்பட்டன.
இரவு 7 மணியளவில் ராமர் பட்டாபிஷேகம் முறைப்படி சம்பிரதாயபூர்வமாக நடத்தப்பட்டது. இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் தங்கத் திருச்சி வாகனத்திலும், ஆஞ்சநேயர் மற்றொரு திருச்சி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதி களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமர் பட்டாபிஷேக விழாவில் முக்கிய அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.