திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25-ந்தேதி ரத சப்தமி விழா

ஒரே நாளில் உற்சவர் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. ஒரே நாளில் உற்சவர் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25-ந்தேதி ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:-
கருடசேவை
25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
ஆர்ஜித சேவைகள் ரத்து
ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






