

சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி மீனம் மாத (பங்குனி) பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறப்பார். அன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை மறுநாள் (மார்ச் 15-ம் தேதி) அதிகாலை முதல் 19-ம் தேதி வரை கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, படிபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக மார்ச் 22ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.
ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். எனவே பக்தர்கள் தங்களுக்கான தரிசன தேதியை முன்பதிவு செய்து சபரிமலைக்கு வர வேண்டும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.