சீர்காழி: அன்னை அஜ்மத் பீவி தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றம்

கந்தூரி விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலச்சாலை கிராமத்தில் அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், 85வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஒரு வார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 27-ம் தேதி சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை 4 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சீடர்கள் பங்கேற்றனர். மதச்சார்பற்று அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.






