

ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் வாகன சேவை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் ஏழாம் நாளான நேற்று மாலையில் திருச்சிவிகையில் எழுந்தருளிய நம்பெருமாள், நெல்வளவு கண்டருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து, திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை அடைந்தார். பின்னர் திருமஞ்சனம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
விழாவின் 8ம் நாளான இன்று (13.05.2026) காலை ஸ்ரீ நம்பெருமாள், கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ரெங்கவிலாச மண்டபத்தை அடைந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மாலை 6.30 மணியளவில் ரெங்கவிலாச மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை அடைகிறார்.
இன்று காலையில் நடைபெற்ற வாகன சேவையை முன்னிட்டு விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை.