மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா தேர்பவனி


மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா தேர்பவனி
x

சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்ற தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் “நான் தாழ்ந்திட, அவர் உயர்ந்திட” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி மறையுரையாற்றி ஆசி வழங்கினார்.

சிறப்பு திருப்பலியில் அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை தேவதாஸ் இக்னேஷியஸ் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தை மனோஜ் சேவியர் அடிகளார் ஆகியோர் மறைவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் மக்களோடு இணைந்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினர். உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், மனிதநேயம் நிலைத்திடவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொடர்ந்து தினமும் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு இணைந்து கொண்டாடிய புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.

புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கிய மாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, கொண்டாரெட்டித் தெரு, அழகப்பசெட்டித் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தன.

திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இவ்வாறு பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

1 More update

Next Story