

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத தரிசனம் நடந்தது. அதைத்தொடர்ந்து துவார பாலகர் மண்டபத்தில் காய்கனிகள் படைத்து வைக்கப்பட்டு சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் தொடர்ந்து இரவு 8.30 மணி வரை சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 55 பக்தர்கள் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தனர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக திருப்பதியில் இருந்து 7 ஆயிரம் லட்டுகள், கண்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் லட்டுகள் விற்பனையானது. தமிழ் புத்தாண்டையொட்டி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.