

உயிருடன் இருப்பவர்களின் நலனுக்காக வேண்டிக் கொண்டு கோவில்களில் அந்த நபர்களின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யப்படுவதுண்டு. இதேபோல் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து, மோட்சம் அடைந்து, நற்கதி பெறுவதற்காக இறந்தவர்களின் பெயரை சொல்லி, அர்ச்சனை செய்வதும் சில கோவில்களில் நடைமுறையாக உள்ளது.
* இறந்தவர்களுக்கு சிவபெருமானே மரியாதை செய்யும் ஐதீகம், நாகப்பட்டினம் காயாரோகணசாமி கோவிலில் உள்ளது. வழக்கமாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்துவிட்டால் கோவில் நடை சாத்தப்பட்டு விடும். ஆனால் இந்த ஊரில் யாராவது இறந்தால் அவரது உடலை கோவில் வாசலில் கொண்டு வந்து வைப்பார்கள். அந்த உடலுக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செய்யப்படும் வழக்கம் உள்ளது.
* இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைவதற்காக கேரள மாநிலம் திருவல்லம் பரசுராமர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இறந்தவர்களின் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்யப்படும் வழக்கமும் உள்ளது.
* காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அர்ச்சனை செய்யப்படுபவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களுக்கு காசியில் அர்ச்சனை செய்யப்படும் பழக்கம் உள்ளது.
* இறந்தவர்களின் பெயரில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் அர்ச்சனை செய்து, மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இப்படி செய்வதால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பது நம்பிக்கை.
* மறைந்த முன்னோர்களுக்காக திருவிடைமருதூர் பூமிநாதர் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்டு, மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது. இதனால் முன்னோர்களின் சாபம் நீங்கி, அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.