

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
24-ம் தேதி வெள்ளிக்கிழமை புருஷா மிருகம் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். முத்திகை நல்லான் குப்பம் குழுவினர் சீர்பாதம் தாங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஏழாம் நாளான இன்று காலையில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின்னர் முக்கிய நிகழ்வான பஞ்சரத தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு சில அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.