

திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த நிலையில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்கு அறநிலையத்துறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில், 100-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 21 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 704 மற்றும் 287 கிராம் தங்கம், 4 கிலோ 745 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.