

தென்காசி:
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மாசித் திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதலாம் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
மாலையில் சுவாமி சன்னதி முன்பு 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரத வீதி உலா நடந்தது.